search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை மகன் கொலை"

    புதுக்கோட்டை அருகே இன்று காலை இடப்பிரச்சனையில் தந்தை-மகன் ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களமாவூர் நமணராயசத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. முத்து விவசாயம் செய்து வந்தார்.

    இவர்கள் இருவரும் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினர். அதனை களமாவூர் நமணராயசத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (45) என்பவர் வாங்கி கொடுத்தார்.

    இந்தநிலையில் திடீரென அந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிக்காக எடுத்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை-மகன் இருவரும் மூர்த்தியிடம் சென்று முறையிட்டனர். நீங்கள் கூறியதன் பேரில் தானே அந்த நிலத்தை வாங்கினோம். இப்போது நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து கொண்டார்களே?

    எனவே நாங்கள் இடம் வாங்க கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் மூர்த்தி பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மூர்த்தி, பணம் தரமாட்டேன், அதற்கு பதிலாக நமணராயசத்திரத்தில் உள்ள எனது தோட்டம் அருகே உள்ள நிலத்தை வைத்து கொள்ளுங்கள். ஆனால் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இதனை தந்தை- மகன் இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

    இன்று காலை பேச்சு வார்த்தை நடத்த இருவரையும் தனது தோட்டத்திற்கு வருமாறு மூர்த்தி அழைத்துள்ளார். இதையடுத்து வீராச்சாமி, மூர்த்தி இருவரும் இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றனர்.

    சிறிது நேரத்தில் தந்தை- மகன் இருவரும் மூர்த்தியின் தோட்டம் அருகே உள்ள வயலில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. பிரான்சிஸ் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இடப்பிரச்சனை தொடர்பாக இன்று காலை மூர்த்தியின் தோட்டத்திற்கு வீராச்சாமி-முத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது, அங்கு ஏற்பட்ட தகராறில் மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து இருவரையும் வயலில் ஓட, ஓட விரட்டி கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மூர்த்தி மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தந்தை -மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட தந்தை-மகன் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது.
    ×